Saturday, June 27, 2026

பூவும் வேர்க்குது

அவள் துள்ளல் கண்டு
பூவும் வேர்க்குது.

பின் எப்படி இருக்கும்
சூரியன் வந்த பின்னும்
பூவின் இதழில்
பனித்துளி.

தூரமும் நேர வித்தியாசமும்

உன் மார்பில் நான் தூங்க ஆசை, 
ஆனால் தூரம் சதி செய்யுது...

உன்னை அலை பேசியிலாவது கண்ணார பார்க்க ஆசை, இந்த பாவப்பட்ட நேர வித்தியாசம் பழி வாங்குகிறது...

ஆறாத ரணம்...

இராஜாவின் பாடலால் கூட ஆற்ற முடியவில்லை,
இராசாத்தி நீ உடன் இல்லாத ரணத்தை...

Tuesday, January 25, 2022

மரம் போல வாழ...

மரம் போல் வாழ வரம் வேண்டும்... 

பறவை க்கும் விலங்கு க்கும்
உலா போகும் இடமாக 
உணவருந்தும் மேடையாக
துஞ்சும் இடமாக
துயில் தரும் தலையணை யாக... 

மரம் போல வாழ வரம் வேண்டும்... 

மரிக்காமல் மண்ணுடன் மகிழ்ந்துறவாட
அம்மண் நீர்த்துப் போகாமல்
அணைத்துக் கொள்ள
மண் புழுவுடன் போட்டி போட்டு உழவுக்கு உதவ... 

மரம் போல வாழ வரம் வேண்டும்...

வருடம் ஒரு முறையாவது, இலைகளைத் துறந்து
உயிரற்ற உறைந்த ஓவியமாக சில மாதங்கள் வாழ்ந்து
பின் புதிய இலைகளை பெற்றெடுக்க...

மரம் போல வாழ வரம் வேண்டும்...

Monday, January 14, 2019

காதல் வைரஸ்

வழக்கமாக...
என் கை கால்களை பதம் பார்க்கும் கொசு...
இம்முறை என் கன்னத்தை கடித்தது...

பாவம்... அதற்கு தெரிய வாய்ப்பில்லை...
உன்னைக் கடித்த பின்...
உன்னுள் உள்ள காதல் வைரஸ் தன்னுள் தொற்றி கொண்டதென்று...

Friday, September 7, 2018

நிறுத்த நினையாமல்...

நாளை வரும் என்ற நினைவாலும்....
அந்த நாளையில் நீ வருவாய் என்ற
நம்பிக்கையாலும்....
நாழிகைகள் ஓடுது....நாட்களும் நகருது....

கடி காரங்களை நிறுத்தலாம்....
காலத்தை நிறுத்த முடியாது....
அப்படியே நிறுத்தினாலும்...
நம் காதலும் அல்லவோ உடன் நின்று போகும்....

ஓடும் நேரத்தை நிறுத்த நினையாமல்...
அது
ஓடி முடியும் முன் இணைந்து விடுவோம் வா....

Sunday, September 10, 2017

அலைகள்

அலைகள்...

பூமியிலுள்ள எல்லா கடற்கரைகளின் ஒருமித்த முதல் அடையாளம்...
அலைகள்...

கடல் நீருடன் ஆடும் காற்றின் விளையாட்டுக்கு பிறந்தது...
அலைகள்...

கால மாற்றத்தில் மாறாதது...
தட்ப வெப்பத்தை தவிடு பொடி ஆக்கக்கூடியது...
அலைகள்...

முடிவின்றி பூமியில்  நிகழும் கோடிக்கணக்கான வற்றில் முக்கியமானது....
அலைகள்....

சூரியனும் சந்திரனும் உறங்கும் போதும் உறங்காதது...
அலைகள்...

விடையில்லா விடா முயற்சிகளின்  வெறுக்க முடியாத உதாரணம்...
அலைகள்...

தன் மீது விளையாடும் மாந்தர்களை ஸ்பரிசிக்கவோ...
அல்லது அவர்களின் காலடி மண் திருடவோ...
அவர்கள் கட்டி வைத்த மணல் கோட்டைகளை இடிக்கவோ....
உயிறற்ற கிளிஞ்சல் களை கரை சேர்க்கவோ...
ஓடும் நண்டுகளில் ஒன்றையாவது உள்ளிழுக்கவோ...

இப்படி எதற்காக வந்தோமென தெரியாமலே...
ஆக்ரோஷமாய் கரை தழுவி...
அனுதாபமாய் நுரை கக்கி... பின் அமைதியாய் மீண்டும் கடலைச் சென்றடையும்...
அலைகள்...